Wednesday, April 2, 2014

’’எப்போதும் பெண்’’ - வாசிப்பனுபவம்

’’பெண் என்ற தீராத அதிசயத்தின்பால் எனக்குள்ள அன்பும், ஆச்சர்யமும், ஏன் பக்தியும்தான் என்னை இதை எழுதச்செலுத்தும் சக்திகள்’’- சுஜாதாவின் முன்குறிப்பிலிருந்து
 ’’இந்த பொண்ணுங்கள புரிஞ்சிக்கவே முடியல!!!’ கோவம் விரக்தி, அழுகை, ஆற்றாமை, ஆச்சர்யம் என்று ஏதேனும் ஒரு உணர்ச்சியில் இந்த வார்த்தையை பயன்படுத்தாத ஆண்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.

ஒரு பெண்ணினால் பிரசவிக்கப்பட்டு, அவளால் பதின்வயது வரை வளர்கப்பட்டு, சகோதரிகள் சூழ வாழ்ந்து வந்தாலும் இன்றூம் ஆண்களுக்கு பெண் ஒரு புரியாத புதிர்தான். பெண்களுக்கும் ஆணை புரிந்துகொள்வதில் சிக்கல்கள் இருக்கலாம். அதை அவர்கள் அவ்வளவாக வெளிப்படுத்தவதில்லை போலும்.

 இந்த நாவலில் ஓர் அளவுக்கு பெண்களின் உலகிற்குள் திருட்டுத்தனமாக நம்மை வழி நடத்திச் செல்கின்றார். அவளின் ஒவ்வொரு அசைவையும் நமக்கு மொழிபெயர்த்து சொல்லியிருக்கின்றார் சுஜாதா. இதில் ஒரு பெண் கருவினில் உருவாதலில் தொடங்கி அவள் தன்னுடைய முதல் பிரசவத்தின்போது (இளம் வயதிலேயே) இறக்கும் தருவாய் முதலான கணங்கள் முதல் கதை நகர்கின்றது.

 இந்த நாவல் எழுத Simon de Beauvoir ன் The Second Sex என்ற நூல் தனக்கு வெகுவாக பயன்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார். ஆணின் x குரோமோசோம் பெண்ணின் X குரோசோமிடம் சேர்ந்த பிறகு ‘அவள்’ உருவாகிறாள்.பின்பு அவள் கருவினில் வளரும் ஒவ்வொரு படி நிலையையும் மிக நுணுக்கமாக வாரம், மாதம் வாரியாக விவரிக்கின்றார். பின்பு பிரசவத்தின் போது அவள் பிறந்தபின்பு, அதிக ரத்தப்போக்கின் காரணமாக அவளின் தாயார் மரணித்து விடுகிறாள். தந்தை அவளை வளர்க்க விரும்பாமல் வேறு ஒரு செல்வந்தர்க்கு கொடுத்துவிடுகிறார். அங்கே அவளின் குழந்தைப்பிராயம் தொடங்குகிறது.

அவள் எப்போதும் தன்னுட ஒரு மரப்பாச்சி பொம்மையை வைத்திருக்கிறாள். அதனுடன் பேசுகிறாள், விளையாடுகிறாள். பொதுவாக ஆண் குழந்தைகள் பொம்மையை விட விளையாட்டுசாமான்கள் மேல் பிரியமாக இருப்பார்கள். பெண் குழந்தைகளுக்கு பொம்மை பிடித்துபோவதற்கான உளவியல் காரணத்தை விளக்குகின்றார். ஒரு பெண்குழந்தைக்கு தன் அங்கங்களின் மூலம் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள முடியாதபட்சத்தில் வெளிப்புற பொருளால் அவள் உருவையொற்ற பொம்மையின் மூலம் தன்னை அடையாளப்படுத்திக்கொள்கின்றாள். (பார்பி டால் அதிகமாக விற்பனையாவது இந்த உளவியலால்தான்)

சிறுவயதில் பிடிவாதத்தைக்கற்றுக்கொள்கிறாள். அவள் மனம் கவர்ந்த பொருள் கிடைக்கும் வரை அவள் ஒரு குட்டி ராட்சசீ என்று குறிப்பிடுகிறார் சுஜாதா. தன்னுடைய தாயின் செய்கைகளை அப்படியே பிரதிபலிக்கிறாள். அவளே தாயாகவும் மாறி தன் பொம்மையை குழந்தையாக பாவித்து அதனை கண்டிக்கிறாள், அணைக்கிறாள், விளையாடுகிறாள்.

 உண்மையான தகப்பன் இரண்டாம் திருமணம் முடித்தவுடன் அந்த சித்தியின் வற்புறுத்தலால் மீண்டும் தன் வீட்டுற்கு அழைத்துவரப்படுகிறாள் ஆண்களுடன் விளையாட ஏன் மறுக்கப்படுகின்றது என்று குழம்புகிறாள். தன்னை கிண்டல் செய்த சிறுவனை பிடித்து கடித்து வைக்க வேண்டும் என்ற வெறியுடன் துரத்துகிறாள். அவன் காம்பவுண்ட் சுவர் ஏறி மறைந்துசெல்கின்றான். ஆணுக்கு இணையான உடல்வலிமை தனக்கு இல்லை என்ற முடிவுக்கு தள்ளப்படுகிறாள்.

பூப்பெய்யும் தருணத்தில் அவள் உடலியல் மாற்றங்கள் மிகுந்த மனக்குழப்பத்தை அளிக்கின்றது. தன்னுடைய ஒவ்வொரு செய்கையும் கட்டுப்படுத்தப்படுகின்றது. பூப்பெய்த பின்பு தான் பிள்ளை பெறுவதற்கு தயார் செய்யப்படுகின்றோம் என்பது உள்மனத்தில் விதைக்கப்பட அது, வெளியில் ஒரு சோகமாக, வெறுப்பாக மலர்கின்றது.

மாதாந்திர அவஸ்தைக்கு இந்த உடலையும் , மனதையும் பழக்கிக்கொள்கிறாள். தான் ஒரு பெண் என்று ஒவ்வொரு கனமும் ஏதேனும் ஒரு நிகழ்வினால் ஊர்ஜிதப்படுத்தப்படுகின்றாள்.

பள்ளியில் கிடைக்கும் தோழி ஆண்களின் உலகத்தை அவளுக்கு விளக்க முற்படுகிறாள். Boys are always boys என்ற புரிதலுக்குள் அவளை இட்டுச்செல்கிறாள். வீட்டுற்கு வரும் உறவினர் மாமா மிக இயல்பாக groping செய்கிறார். ஒரு சமயத்தில் அவர் தன் மனைவியுடன் உறவில் இருப்பதை பார்க்க நேரிடுகையில் மொத்தமாக ஏதோ ஒன்றை இழந்ததைப்போல உணர்கின்றாள்.

அண்ணனின் தோழன் கொடுத்த காதல் கடிதம் வேறு அவள் மனதை அலைகழிக்கின்றது. அதை நினைத்து ஒரு வகையில் பெருமிதம் கொள்கின்றாள். இருப்பினும் தனக்கு வரப்போகிற கணவனைப்பற்றிய அவளின் கனவுகள் வேறு மாதிரி இருந்தது. நல்ல உயரம், நிறைய படிப்பு, திருத்திய முகம், டை கட்டிக்கொண்டு, ஷூ மாட்டிக்கொண்டு இருந்தான். முகம் மட்டும் வேறு பட்டுக்கொண்டே இருந்தது

 வேறு ஊருக்கு ஒரு திருமண நிகழ்வுக்காக ட்ரெயினில் செல்கையில் அந்த பயணம் மிகவும் பிடித்துப்போகின்றது. பயணத்தில் தன்னை கவர்வதற்காக ஆண்கள் செய்யும் சேஷ்டைகளை ரசித்தாலும் அதை கண்டும் காணாமல் இருக்கிறாள். உள்ளுக்குள் தன்னை மகாராணியாக பாவித்துக்கொள்கிறாள்.

திருமண வைபவத்தில் நிறைய கேலி கிண்டல்கள், அங்கே அறிமுகம் ஆகும் ஆடவன் மிகுந்த நகைச்சுவை உணர்வுடன் பேசுவது அவளுக்கு பிடித்துப்போகிறது. ஒரு தனிமையான சந்தர்ப்பத்தில் அவன் எல்லை மீறூம்போது உடல் உதறலுடன் அவனை தட்டிக்கழித்து ஓடி வந்து விடுகிறாள். அந்த எல்லை மீறுதல் ஒரு இன்பத்தை தந்து இருந்தாலும் தன்னுடைய வருங்கால கணவனுக்கு துரோகம் இழைத்ததாக மனச்சோர்வு அடைகிறாள். ஆண்களின் மீது வெறுப்பும், பயமும் ஏற்படுகின்றது.

 தந்தையை வற்புறுத்தி கோ-எட் காலேஜில் சேராமல் மகளிர் கல்லூரியில் சேருகின்றாள். அங்கே ஒரு tomboy மாதிரியான பெண்ணின் நட்பு கிடைக்கின்றது. காலேஜ் படிக்கும்போதே தன் தகப்பனாரின் உடல் நிலையை கருத்தில் கொண்டு அவளுக்கு திருமணம் செய்ய மாப்பிள்ளை தேடும் படலம் ஆரம்பமாகின்றது. முதலில் மாப்பிள்ளையின் அம்மா,அக்கா வந்து பார்த்து செல்கிறார்கள். ஊருக்கு சென்று பதில் போடுவதாக சொன்னார்கள். ஆனால் அந்த மாப்பிள்ளை தன் அலுவலக தோழியை ரிஜிஸ்தர் மேரேஜ் செய்து கொண்டது பிற்பாடு தெரிந்தது,

பிற்பாடு டெல்லியில் வேலை செய்யும் ஒருவருடன் திருமணம் நிச்சயம் ஆகி திருமணம் முடிந்தது.முதலிரவில் உடனடியாக எதுவுமே தோன்றவில்லை. வெட்கத்தையும் தன் மானத்தையும் பறிகொடுத்தது போலவே உணர்ந்தாள்.. தன்னை ஒரு பொருளாக் பார்க்காமல் ஒரு மனுஷியாக அவன் பார்த்தது மகிழ்ச்சியளித்தது. கொஞ்சம் கொஞ்சமாக காதலிக்க, காதல் வசனம் பேச கற்றுக்கொண்டாள். அவன் டெல்லி சென்றதும் பிரிவுத்துயர் வாட்டியது. அவன் டெல்லியில் தனிக்குடித்தனம் வைத்தாயிற்று.

 உண்மையில் கல்யாணம் என்பது இயல்பான உறவை ஒரு கடமையாக மாற்றி விடுகின்றது.
ஆரம்ப நாட்களில் ஆண், பெண் என்கிற நிலையால் இருந்த கவர்ச்சிகரமான சந்தேகங்களும் ஆறூ மாசத்தில் தீர்ந்து போய்விட்ட பின்னர் இருப்பது சரணாகதிதான். உடல் உறவில் பயமும் குற்ற உணர்ச்சியும் விலகிப் போய்விட்டாலும் சில ராத்திரியின் கணங்களை அவள் அனுபவிக்கவில்லை. சில தினங்களை அனுபவித்தால் என்றாலும் அவை அரிதாகத்தான் இருந்தன. நாள்கணக்கு தப்பிய உறவால் அவள் கர்ப்பமடைகிறாள்.

இப்போது வேண்டாம் என அவள் கணவன் கலைக்க சொல்லியும் மறுத்துவிடுகிறாள்.பின்பு சென்னை வந்து தாய் வீட்டில் ராஜமரியாதையோடு கவனிக்கப்படுகின்றாள். கணவனின் சொல்பேச்சைக்கேட்காதலால் அவனின் பாராமுகம் படுத்துகின்றது, பிரசவத்தின் போது கூட விடுப்பு எடுத்துக்கொண்டு வரமுடியவில்லை அவனால் பின்பு பிரசவத்தின் போது ஒரு பெண் மகவை ஈன்று எடுக்கின்றாள். தன் தாய்க்கு ஏற்பட்ட இரத்தப்போக்கைப்போலவே இவளுக்கும் ஏற்பட்டு மரணித்துவிடுகிறாள்.

 இந்த கதையில் வரும் பெண்களின் பாத்திரப் படைப்பு மிகவும் இயல்பாக கையாளப்பட்டுள்ளது. பெண்மையின் பல்வேறு unique குணநலன்களை அவை பிரதிபலிக்கின்றது. அவளை தத்தெடுத்த தாய் ஒரு பிள்ளை பேறு அற்றவள். அந்த கவலையாலேயே தன் கணவன் மீது அதிகாரம் செலுத்தியும் தன் ஆற்றாமையை வெளிப்படுத்துகிறாள். இவளை பிரிந்த சோகத்திலேயே உடல் நலிவுற்று இறந்துவிடுகின்றாள்

சித்தி கதாப்பாத்திரம்தான் அல்டிமேட். அவளின் தியாக உணர்வுதான் அந்த குடும்பத்தையே கட்டிகாத்துவருகின்றது.

 இறுதியாக பெண்களை நாம் புரிந்துகொள்ள பிரம்மபிரயத்தனம் செய்யத் தேவையில்லை. அவளை சக உயிரியாக, மனுஷியாக மதிக்கப்படும்போது அந்த புரிதல் என்ற அற்புதம் நிகழ்ந்துவிடும்.

  பெண் விதைக்கப்படுபவள் பிறக்கப்படுவதில்லை 
விதைகள் விருட்சங்களை சுமக்கிறது 
ஆணவமற்று ஆண் அகம் பற்றுபவள்
 ஆணவம் மாற்றுங்கள் அடக்குமுறை அகற்றுங்கள்..! 
பெண் குலவிளக்கு மட்டுமல்ல குன்றின் மேல் விளக்கும்..! 
பெண்மை போற்றுதும், பெண்மை போற்றுதும் 
ஞானிலம் போற்றிட பெண்மை போற்றுதும்..!! 
 - கவிஞர். பாரதிமகள்

No comments:

Post a Comment